டெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப்பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில் டெஹ்ரானின் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிகிறது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவாக கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ‘எங்களுக்கு எதிராக ஈரான் அணு குண்டுகளை தயாரித்து வருகிறது’ என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. அப்படி அணு ஆயுத பலம் பொருந்திய ஈரானால் தங்களுக்கு எப்போதும் ஆபத்துதான் என கருதி, ஈரானின் அணு ஆயுத தளங்கள் அனைத்தையும் தகர்க்க இஸ்ரேல் திட்டமிட்டது. அதன்படியே நேற்று முன்தினம் ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடங்கியது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிட்டிருந்தது. ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை 200க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் துல்லியமாக தாக்கின. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள், முக்கிய அணுசக்தி மையமான நட்டன்ஸ், இஸ்பகான் மையங்கள் தகர்க்கப்பட்டன. இதில் 78 பேர் கொல்லப்பட்டனர். 320 பேர் காயமடைந்ததாக ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார்.
குறிப்பாக ஈரானின் ஆயுதப்படைகள் தளபதி முகமது பமேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி உள்பட பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமான அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி மாயெனி அறிவித்த சில மணி நேரத்திலேயே ஈரானும் பதிலடி கொடுத்தது. அதன்படி 200க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் 100க்கு மேற்பட்ட டிரோன்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து அலை அலையாக பாய்ந்தன. இவற்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஆனாலும் சில ஏவுகணைகள், டிரோன்கள் இஸ்ரேலின் பலம் பொருந்திய அயர்ன் டோன், பாதுகாப்பு அமைப்பையும் பல இடங்களை தாக்கியது. குறிப்பாக ஜெருசலேம், டெல் அயில் போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஈரானின் இந்த பதிலடியில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பல இடங்களில் வான் தாக்குதலுக்கான அலாரம் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தன. இந்த தாக்குதலை தொடர்ந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அடுவுறுத்தியது. பல இடங்களில் ஈரானின் தாக்குதலை அமெரிக்க தயாரிப்பு வான்பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்ததாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் சிலர் கூறினர்.
இரு தரப்பினரும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் தீவிர போராக மாற வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, போர் நிறுத்தம் செய்யுமாறும் வழியுறுத்தி உள்ளன. மேலும் இந்த போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு வழியான விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் வான்பகுதியை மூடியுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் விமானங்கள் அந்த வழியான போக்குவரத்தை ரத்து செய்து உள்ளன. இதற்கிடையே அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று ஓமனில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என ஈரான் கூறியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேவ் கூறுகையில், ‘பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக்கும் வேலையை அமெரிக்கா செய்துள்ளது’ என்றார். எனினும் இன்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதா? என்று எதையும் அவர் கூறவில்லை. அதேநேரம் இஸ்ரேல் தனது தாக்குதல் நடவடிக்கை மூலம் ஈரானின் அனைத்து விதிகளை கடந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
மறுபுறம், ஈரான் தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இல்லையென்றால் டெஸ்ரானை எரித்து விடுவோம் என அந்த நாட்டு ராணுவ அமைச்சர் கேட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். இவ்வாறு இஸ்ரேலும், ஈரானும் தாக்குதலை தொடர்வதில் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் 3வது நாளாக இன்று இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 2 முக்கிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதுகுறித்து ஈரானின் எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், ‘ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத்திட்டம் தொடர்பான டெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது ஐடிஎப் விரிவான தொடர் தாக்குதல்களை நடத்தியது.
இதில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சக தலைமையகம், எஸ்பிஎன்டி அணுசக்தி திட்டத்தின் தலைமையகம் மற்றும் கூடுதல் இலக்குகள் ஆகியவை அடங்கும்’ என்று கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என உயர் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் அரசு தரப்பு வெளியிட்ட செய்தியில், ‘வரவிருக்கும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும். இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் ‘ரைசிங் லயன்’ நடவடிக்கையை தொடங்கியவுடன், ஈரான் நேற்று இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை தொடங்கியது. மேலும், ஈரான் தாக்குதலை தடுத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் ராணுவ மற்றும் கடற்படை தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் இன்று பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிகிறது: பதிலடி தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் appeared first on Dinakaran.