
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தினை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). இவர் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2.12.2016 அன்று தனது வீட்டிற்கு வரச்சொல்லி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் அடித்தும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக கடந்த 13.4.2017 அன்று அந்த இளம்பெண் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் சசிரேகா ஆஜாரானார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கற்பழிப்பு குற்றத்துக்காக 10 ஆண்டுகளும், பெண்ணை மிரட்டியமைக்கு 2 ஆண்டுகளும், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக 3 ஆண்டுகளும் சேர்த்து மொத்தம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.