சென்னை: சென்னை அண்ணாபல்லைக்கழக மாணவியை பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேகரன் மீது, இளம் பெண் ஒருவர் அளித்த பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஞானசேகரனை 2 நாள் காவலில் எடுத்து விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புதிய வழக்கு தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் தனியாக பேசி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மாணவனை விரட்டி அடித்துவிட்டு மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மறுநாள் தனக்கு நடந்த சம்பவத்தை காவல் அவசர கட்டுப்பாட்டு எண் 100 உதவியுடன் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் குற்றவாளி ஞானசேகரன்(37) என்பவனை கைது செய்தனர். பின்னர் ஞானசேகரன் மீது போலீசார் 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஞானசேரகன் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் இருந்த ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய அறிவியல் பூர்வமான நடவடிக்கையில் குற்றவாளி ஞானசேகரன் மட்டும் தான் என தெரியவந்தது.
அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகா பிரியா, ஐமன் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய ‘சிறப்பு புலனாய்வு குழு’ அமைத்து உத்தரவிட்டது. அந்த சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையிலும் சென்னை காவல்துறை நடத்திய விசாரணை சரியானது என்றும், குற்றவாளி ஞானசேகரன் மட்டும் தான் என்றும் உறுதி செய்து நீதிமன்றத்தில் தனது அறிக்கையை அளித்தது. இருந்தாலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் சென்னை போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை மற்றும் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை பெற்று தனியாக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஞானசேகரன் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் சிபிசிஐடியில் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இளம் பெண்ணுக்கு ஞானசேகரன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதனை தொடர்ந்து ஞானசேகரன் மீது சிபிசிஐடி மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் புதிய வழக்கில் புழல் சிறையில் உள்ள ஞானசேகரனை பலத்த பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் ஞானசேகரனை விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய பாலியல் வழக்கில், இளம் பெண் அளித்த ஆதாரங்களை ஞானசேகரனிடம் நேரடியாக வைத்து விடிய விடிய சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த புதிய பாலியல் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post இளம் பெண் அளித்த பாலியல் புகாரில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு: 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.