சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லாது என்றும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடக்கோரி ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த விண்ணப்பங்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உரிமைகள் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு சூரியமூர்த்தியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன், அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் தடையை நீக்க கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுக்களுக்கு பதிலளிக்கவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தனிப்பட்ட அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோர முடியாது. மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளன என்று வாதிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீசுக்கு பதிலளிக்கப்பட்டது. மற்றவர்கள் மனுக்களை விசாரிக்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் உள்ள நிலையில், இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது.
அதனால் மற்றவர்கள் அளித்த மனு மீது விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தரப்பின் வாதத்துக்காக வழக்கு விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
The post இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியாது: ஐகோர்ட்டில் இபிஎஸ் தரப்பு வாதம் appeared first on Dinakaran.