இலை தலைவரை திட்டியவர்களுக்கு எல்லாம் கட்சியில் பெரிய பொறுப்புகளை கொடுத்ததை பார்த்து குமுறும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

4 months ago 13

‘‘மலராத கட்சியின் திட்டம் தவிடுபொடியாகி விட்டது போல..’’ என கேட்டுக்கொண்டே வந்தார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரின் முதல்படை வீடு – தர்கா பிரச்னையை கையிலெடுத்த எதிர்தரப்பினரில் சிலர், சுயலாபத்திற்கென அரசியல் செய்து அதில் குளிர்காய நினைத்தனர். ஒரு கட்டத்தில் கொஞ்சமாக பிரச்னை அடங்கிய நிலையிலும், மலராத கட்சியும், அதனைச் சார்ந்த சில அமைப்புகளும் மட்டும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் தொடர்ந்து இப்பிரச்னையை பெரிதாக்கும் பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். எப்படியும் இதன் மூலம் பெரும் பிரச்னையை கிளப்பி, மலராத கட்சியின் செல்வாக்கை உயர்த்திட, மக்கள் உணர்வுகளை கிளப்பி, ஏகப்பட்ட ஆட்டங்கள் போட்டனர். ஆனால், உள்ளூர் மக்கள் கொஞ்சமும் அசராமல், ‘ஒற்றுமையுடன் பல காலம் இணைந்து வாழ்கிற எங்களுக்குள் பிரிவினை ஏதுமில்லை. வெளியிலிருப்போர் விலகிப்போங்கள். எந்த சுயநலவாதிகளுக்கும் நாங்கள் பலியாகத் தயாரில்லை’ என பளிச்சென பல்வேறு வகைகளில் தங்கள் நல்லிணக்க நிலையை வெளிப்படுத்த, கலவரக் கடை விரித்த மலராத கட்சியினர் கூடாரத்தை கலைக்க வேண்டியதாகி விட்டதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாநகர போக்குவரத்து மண்டல பொறுப்பு நிர்வகிப்பதில் இலைக்கட்சியில் ஏகப்பட்ட பணம் விளையாடுதாமே.. தெரியுமா..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக் கட்சியில் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக மாநகர போக்குவரத்து மண்டல பொறுப்பில் தேர்தல் நடத்தாமல் இருந்து வந்தாங்களாம்.. இந்நிலையில் தென் சென்னை பகுதியில் ஏற்கனவே பொறுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆதரவாளரான நிலாவில் பாதி பெயரை கொண்டவர் தொடர்ந்து இருக்க தலைமை முடிவு செய்திருக்காம்.. வடசென்னை மண்டல பொறுப்பில் புதிய நிர்வாகிகளை நியமிக்க மற்றொரு முன்னாள் பெண் அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாம்.. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துருக்கு.. அவர் தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பலர் பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுக்கு ஆளானவங்க என்பதை ஆதாரத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமை கவனத்திற்கு கொண்டு போனாங்களாம்.. இதனால் கடந்த 5ம் தேதி ராயபுரம் தலைமை அலுவலகத்தில் இலைக்கட்சி தலைவரே ஆலோசனைக் கூட்டம் நடத்தி பெண் மாஜி தயாரித்த பட்டியலை சரிபார்க்கும் படி வடக்கு மண்டலத்தில் உள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தினாராம். இதில் திடீர் திருப்பமாக வடக்கு மண்டலத்திற்கு சம்பந்தமில்லாத மாவட்ட செயலாளரான சத்தியத்திற்கு பெயர் போனவர் தனது ஆதரவாளரான கடவுள் பெயரை கொண்டவரை வடக்கு மண்டலத்தில் மண்டல செயலாளராக நியமிக்க வேண்டும்னு மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தாராம். ஏற்கனவே இவரோடு நெருங்கி தொடர்பில் உள்ள மாவட்ட செயலாளர்களும் இதற்கு இசைவு தெரிவித்தாங்களாம். அதிகமாக மைக்கில் பேசும் மைக் மோகன் மட்டும் இதற்கு எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாராம். இந்த விஷயத்தில் பணம் பெருமளவில் கைமாறப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்க. மேலும் சத்தியமானவர் சிபாரிசு செய்த கடவுள் பெயரை கொண்டவர் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பணியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதன்பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தவராம். மாஜி பெண் அமைச்சர் தயாரித்த பட்டியலில் இவரது பெயர் இடம்பெறவில்லையாம். அப்படி இருக்க திடீரென புதிய நபரை எப்படி உள்ளே கொண்டு வருகிறார்கள்னு இலைக்கட்சியை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் குழப்பத்தில் இருக்காங்களாம். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஒருவரின் வரவை தடுத்து நிறுத்தவே இந்த முயற்சிகள் நடந்து வருவதாக சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை தலைவரை திட்டியவர்களுக்கே பொறுப்பு கொடுத்திருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரான மாங்கனி மாநகரில் சமீபத்தில் பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிச்சாங்களாம். அப்படி நியமிக்கப்பட்ட நபர்களில், முக்கிய பொறுப்புகளை பிடித்தவர்கள் எல்லாம், தலைவருக்கு எதிராக செயல்பட்ட அணிகளில் இருந்து வந்தவங்களாம். அதுவும் 2021ம் ஆண்டில் மிக கடுமையாக இலைக்கட்சி தலைவரை விமர்சித்து, சமூக வலைதலங்களில் வீடியோ போட்டிருக்காங்க என்ற ஆதாரம் எல்லாம் இப்போது வெளியாகியிருக்காம். அந்த பொறுப்பாளர்கள், தாங்கள் இருந்த குக்கர், பலாப்பழம் அணிகளை விட்டு வெளியேறி, இங்கு வந்து சேர்ந்ததும் முக்கிய பொறுப்புகளை பிடிக்க காய் நகர்த்தி, அதை கச்சிதமாக செய்துவிட்டார்களாம்.

ஆண்டு கணக்கா, தலைவரோட பயணிக்கிற பழைய நிர்வாகிகள் எல்லாம், பேரவை, தகவல் தொழில்நுட்பம், மற்றும் அணிகளுக்கெல்லாம் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்றிருந்த நிலையில், அந்த பொறுப்புகளை தூக்கி தலைவரை திட்டியவர்களுக்கே கொடுத்திருக்காங்களாம். அதுவும் தலைவர் கையாலேயே அறிவிப்பை வெளியிட வச்சிட்டாங்களாம். இதெல்லாம், மாநில பொறுப்பில் இருக்கிறவங்களுக்கு கொடுக்கப்பட்ட பல லகரங்கள் பார்க்கிற வேலை… இப்படியே போனால் நாம எங்கே தேர்தல் நேரத்தில் வேலை பார்ப்பது என பழைய நிர்வாகிகள் புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை தலைவரை திட்டியவர்களுக்கு எல்லாம் கட்சியில் பெரிய பொறுப்புகளை கொடுத்ததை பார்த்து குமுறும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article