இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்: மேயர் ஆர்.பிரியா

5 hours ago 3

சென்னை: மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இராயபுரம் மண்டலத்தில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று திறந்து வைத்து, பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.

மேயரின் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இலவசமாக வழங்கிட ஏதுவாக, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மையம் அமைத்திட மண்டலம் ஒன்றுக்கு ரூ.50 இலட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மேயர் ஆர்.பிரியா , பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை 15 மண்டலங்களிலும் தொடங்கி வைக்கும் விதமாக, இன்று (27.06.2025) (இராயபுரம் மண்டலம், வார்டு-51, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தினைத் திறந்து வைத்து. முதற்கட்டமாக தையல் பயிற்சி பெறும் மகளிருக்கு தையல் பயிற்சிக்கான பொருட்களின் தொகுப்பினை வழங்கினார்.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பயிற்சி மையங்களில் 115 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் துணிகளை சரியான முறையில் வெட்டுதல் மற்றும் தைத்தல், ஆரி மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திற்கும் 40 தையல் இயந்திரங்கள் வரை வழங்கப்பட்டு, 5 அனுபவமிக்க பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக இம்மையங்களில் கணினிப் பயிற்சியும், அழகுக்கலைப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) எம்.பிரதிவிராஜ், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விசுவநாதன் மண்டலக்குழுத் தலைவர் பிஸ்ரீராமுலு. மாமன்ற உறுப்பினர் நிரஞ்ஜனா ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்: மேயர் ஆர்.பிரியா appeared first on Dinakaran.

Read Entire Article