
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி அருகே, கோட்டை மலை காட்டுப்பகுதி, கொம்புத்துறை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கொம்புத்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மினிலாரியிலும் பதிவு எண் இல்லாத ட்ரெய்லருடன் கூடிய டிராக்டரிலும் கொண்டு வரப்பட்ட 30 கிலோ வீதம் 103 மூட்டைகளில் இருந்த சுமார் 3,000 கிலோ பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றபட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்கள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.