சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க அனைத்து தூதரக நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடி படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இலங்கை கடற்படையினர் கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளனர்.
இந்த சூழலில், 2024 டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்னையை இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகவும், இந்திய மீனவர்களின் நலனை உறுதியாகக் காப்பதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் தனது 09.02.2025 நாளிட்ட கடிதத்தில் உறுதியளித்திருந்தார். இருந்தபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளைத கவலையோடு சுட்டிக்காட்டுகிறேன். எனவே, நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்கவும், முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு விடுத்த எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
The post இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவுக்கு கடிதம் appeared first on Dinakaran.