
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் மற்றும் அவர்களது படகுகளையும் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் இன்று (18.03.2025) கைது செய்து அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளார்கள். இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது, சிறை தண்டனை விதிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்து கடந்த 13.03.2025 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் சென்று புகார் தெரிவித்தார்கள். மீனவர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நிற்கும் என்று மத்திய மந்திரி உறுதியளித்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை தொடர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் மீனவர்கள் கைது குறித்து ராகுல் காந்தி, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியும், கைது நடவடிக்கையை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் மீனவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது மத்திய பா.ஜ.க.அரசு.
இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீனவர்களை கைது செய்வதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர் பகுதிகளிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு, இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.