காரைக்கால்: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து காரைக்காலில் 1000 மீனவர்கள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மீனவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 27ம்தேதி காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி, அவர்களை கைது செய்ததை கண்டித்து தொடர்ந்து 8வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் விசைப்படகுகளில் கருப்பு கொடிகளை கட்டி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் 11 கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் மீனவ கொடியை கையில் ஏந்தி காரைக்கால் ரயில் நிலையத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு காரைக்கால்-திருச்சி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள், இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தனர். அப்போது மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post இலங்கை கடற்படை கைது செய்தவர்களை மீட்காத ஒன்றிய அரசை கண்டித்து 1000 மீனவர்கள் ரயில் மறியல்: காரைக்காலில் போலீசாருடன் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.