* ரூ.7,671 கோடி கோயில் நிலங்கள் மீட்பு
* 18,000 கோயில்களில் ஒருகால பூஜை
சென்னை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பல்லாண்டு காலம் தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையில் அறநிலைத்துறையின் தொண்டுகள் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோது, கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமென கருதி பி.கே.சேகர்பாபுவை அறநிலைய துறை அமைச்சராக நியமித்து செம்மையாக நடைபெற வழிவகுத்தார். அதன்படி செய்யப்பட்ட பணிகள் குறித்தான முழு விவரம் பின்வருமாறு;
பெருந்திட்ட வரைவு பணி
திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சமயபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட 19 கோயில்களில் ரூ.1770 கோடி மதிப்பீட்டில் பணிகள் மற்றும் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கு விழா
கடந்த 20 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 119 கோயில்கள் உட்பட 2,967 கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்று இறையன்பர்கள் மகிழ்கின்றனர். விரைவில் நாகப்பட்டினம் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் 3,000வது குடமுழுக்கு விழா ஜுன் 5ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவையல்லாமல் ரூ.5,970.26 கோடி மதிப்பீட்டில் 25,813 பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருமணம்
முதல்வர் அறிவித்தபடி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 1,800 இணையர்களுக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு இணையருக்கும் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை, பட்டு வேட்டி உட்பட ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருள்களுடன் முதல்வரால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்
இதுவரை 971 கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,671.23 கோடி மதிப்பிலான 7,560.05 ஏக்கர் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுபோக 2,01,097.42 ஏக்கர் நிலங்கள் நவீன புவியிடங்காட்டி உபகரணங்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, 1,23,851 எல்லை கற்கள் நடப்பட்டு கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களிலிருந்து ரூ.1,054.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஆவணங்களை பாதுகாத்தல்
ஆணையர் அலுவலகம் மற்றும் கோயில்களில் உள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்கள் (சுமார் 24 லட்சம் பக்கங்கள்) எல்காட் நிறுவனம் மூலமாக ஆவணப்படுத்தி பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஸ்கோச் விருது
புதுடெல்லியில் செயல்பட்டு வரும் ஸ்கோச் குரூப் நிறுவனமானது மக்களின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் 2025ம் ஆண்டிற்கான அரசுத்துறை நிறுவனங்களுக்கான ஸ்கோச் தங்க விருதினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதள சேவையான ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்திற்கு கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெற்ற விழாவில் வழங்கியது.
அன்னதானம்
திருவரங்கம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், மதுரை, ராமேசுவரம், திருவண்ணாமலை, பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை, கள்ளழகர், மருதமலை ஆகிய 13 கோயில்களில் இறையன்பர்களுக்கு நாள்முழுவதும் அன்னதானமும், 764 கோயில்களில் ஒரு வேளை அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 3.5 கோடி இறையன்பர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
உணவு தரச்சான்று
ஒன்றிய அரசால் கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் தரச்சான்றிதழ் 523 கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தரச்சான்றிதழ் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிக பயணம்
60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும், 920 பக்தர்கள் ராமேசுரம் – காசி ஆன்மிக பயணத்திற்கும் அரசு செலவில் அழைத்து செல்லப்பட்டனர். ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு 1003 பக்தர்களும், புரட்டாசியில் வைணவ கோயில்களுக்கு 1,008 பக்தர்களும் அழைத்து செல்லப்பட்டனர்.
முருகன் மாநாடு
பழனியில் கடந்தாண்டு ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் முருகன் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1,003 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அர்ச்சகர் பணி
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தினை கடந்த 1972ம் ஆண்டில் கலைஞர் நிறைவேற்றினார். அச்சட்டம் பல்வேறு தடைகளை கடந்து முதல்வரின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முதல்வரின் ஆட்சியில் பயிற்சிகள் பெற்ற 3 பெண்கள் உட்பட 94 பேருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 11 பெண் ஓதுவார்கள் உட்பட 45 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருகால பூஜை திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தில் ஒரு கோயிலுக்கு முதலீடு செய்யும் தொகை 2021ம் ஆண்டில் வைப்பு நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கினார். இதற்கான செலவினம் ரூ.310 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 2021-24 வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆண்டுக்கு 1,250 கோயில்கள் வீதம் 3 ஆண்டுகளில் 3,750 கோயில்களுக்கு தலா 2 லட்சம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி, இத்திட்ட நிதி ரூ.2.50 லட்சம் ஆக உயர்த்தி 1250 கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில்கள் பயன்பெற்றுள்ளன.
கிராமப்புற கோயில்களின் திருப்பணி
2024-25ம் ஆண்டில் 1250 கிராமப்புற கோயில்களுக்கான திருப்பணி நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 5,000 கிராமப்புற கோயில்கள் பயன்பெற்றுள்ளன.
கோயில்களில் திருப்பணி
2022-23 ஆம் நிதியாண்டு முதல் 2024-25ம் நிதியாண்டு வரை ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் ரூ.300 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளன. 274 கோயில்களில் ரூ.429.67 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 53 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.
யுனெஸ்கோ விருது
கும்பகோணம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டட கலையினை பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் கோயிலை புனரமைத்தற்காக கலாச்சார பாரம்பரிய புனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பி வட ஊர்திகள்
பக்தர்களின் வசதிக்காக பழனி கோயிலில் கம்பி வட ஊர்தி வசதி செயல்பாட்டில் உள்ளது. கரூர் மாவட்டம் அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலும், சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் ரூ.20.30 கோடி மதிப்பீட்டிலும், கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் காசிவிசுவநாத சுவாமி கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 294 கோயில்களில் தமிழில் வழிபாடு நடைபெற்று வருகிறது. அன்னை தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவிகித தொகை பங்கு தொகையாக வழங்கப்படுகிறது.
வள்ளலார் முப்பெரும் விழா
அருள்பிரகாச வள்ளலாரின் 200ம் ஆண்டு பிறந்த நாள், தர்மசாலை தொடங்கப்பட்ட 156வது ஆண்டு, ஜோதி தரிசனத்தின் 152வது ஆண்டு ஆகிய வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தி போற்றும் முப்பெரும் விழா 2022 அக்டோபர் முதல் தொடங்கி 52 வாரங்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் வார விழாவில் பங்கேற்று வள்ளலார் 200 இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார். 52வது நிறைவு விழாவிலும் பங்கேற்று முதல்வர் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையை வழங்கி பணிகளுக்கு ஊக்கமளித்தார். கலைஞரால் முடிவுற்ற மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் பணி முதல்வரின் நடவடிக்கையின் காரணமாக ரூ.19.17 கோடியில் கற்கோயிலாக கட்டப்பட்டு வருகிறது.
அவ்வையாருக்கு மணிமண்டபம்
வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் ஔவையார் கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.
தங்க முதலீட்டு திட்டம்
இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் பிரசாதம்
நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 25 கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ மையம்
மலைக்கோயில்கள் மற்றும் அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் 19 கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலம் இதுவரை 6.88 லட்சம் பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர்.
ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல்
இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவின் மூலம் கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்நூல்கள் இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் ஆணையர் அலுவலகத்திலும், 203 கோயில்களிலும் புத்தக விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. முதல்வராக பொறுப்பேற்று 4 ஆண்டுகால ஆட்சியின் அறநிலைய பணிகள் தமிழ் பண்பாட்டின் பெருமையை எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. இறையன்பர்கள், திராவிட நாயகர் ஆட்சியின் அறநிலையத்துறை தொண்டுகள் பல்லாண்டு காலம் தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளன என போற்றுகின்றனர்.
The post இறையன்பர்கள் போற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டு திராவிட நாயகர் ஆட்சியில் ‘தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்தும் அறநிலைய துறை தொண்டுகள்’: 4 ஆண்டுகளில் 2,967 குடமுழுக்கு விழா appeared first on Dinakaran.