இறந்தவர்கள் உயிர்பெற்று வருவதை மர்மக் கதைகளில் தான் படித்திருக்கிறோம். ஆனால், உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாகவும், இறந்தவர்கள் உயிரோடு இருப்பது போலவும் சான்றழித்து அந்த மர்மக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்கும் போது நான் இறந்துவிட்டதாக சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்து இன்னொருவர் எனது சொத்தை அபகரித்துள்ளார். இப்போது, நான் உயிரோடு இருப்பதாக விஏஓ-விடம் சான்றிதழ் பெற்று எனது சொத்தை மீட்க போராடிக் கொண்டிருக்கிறேன்’ என மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு கொடுத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.