பொன்னேரி, ஏப்.29: மீஞ்சூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது தொடர்பாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அந்தக் காட்சிகளில் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு லாவகமாக அதன் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர் ஆய்வின்போது சிசிடிவி காட்சிகளில் இருந்த நபர்கள் மீஞ்சூரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் இருசக்கர வாகனங்களை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். வாகனங்களை திருடி அங்குள்ள பழைய இரும்பு விற்கும் கடையில் கொடுத்து பாகங்களை பிரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இரு சக்கர வாகனங்களை திருடிய வினோத் என்ற தர், செல்வகுமார், சூர்யா மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கி பாகங்களை கழற்றி விற்பனை செய்த இந்து முன்னணி பிரமுகரான வெங்கடேஷ்ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.