
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் 18-வது ஆண்டாக இந்த போட்டி வீறுநடை போடுகிறது.
இந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்ட கடந்த 2020-ம் ஆண்டு 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை' கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் இடையே ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியும். அந்த வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இறங்குவதன் தாக்கத்தை கடந்த சீசனில் பார்க்க முடிந்தது.
இருப்பினும் இம்பேக்ட் வீரர் விதிமுறை மீது ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் கடந்த வருடம் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதிமுறை ஒரு ஆல் ரவுண்டர் உருவாவதைத் தடுப்பதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆல் ரவுண்டர்களை வளர்வதை தடுப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளரும், ராஜஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"அது (இம்பேக்ட் வீரர் விதிமுறை) வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாக சொல்லவேண்டுமெனில் நான் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தபோது, இந்த விதியை நான் விரும்பவில்லை. அது விளையாட்டை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றுகிறது. இது சிக்கலை ஏற்படுத்தி போட்டிகளை இறுதி வரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
ஆனால் இது சர்வதேச கிரிக்கெட்டில் சில சவால்களை ஏற்படுத்தி உள்ளது. புள்ளிவிவரப்படி, அணிகள் கூடுதல் பேட்டரைக் கொண்டிருப்பதால் அதிக ரன்கள் குவிக்கப்படுகின்றன. நீங்கள் 8-வது அல்லது 9-வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனை வைத்திருக்கும்போது 6 அல்லது 7 விக்கெட்டுகளை இழந்த பிறகும் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க இது அனுமதிக்கிறது.
ஒரு பயிற்சியாளராக, நீங்கள் ஆல்ரவுண்டர்களை உருவாக்க விரும்புகிறீர்கள். மேலும் பழைய வடிவத்தில், சில வீரர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்ய அல்லது பந்து வீச அதிக வாய்ப்புகளை பெற்றிருப்பார்கள். இம்பேக்ட் வீரர் விதி அதை மாற்றியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இது இந்திய அணிக்கு ஆபத்தாக அமையலாம்" என்று கூறினார்.