லாகூர்: காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தானின் மிக பிரபலமான லால் மசூதியின் மதகுழு அப்துல் அஜீஸ் காசி, பாக். அரசை விமர்சனம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. மசூதிக்கு வந்தவர்களிடம் அப்துல் அஜீஸ் காசி, ‘இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுடன் நிற்பீர்களா?’ என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை. இதையடுத்து பாக். நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் கைகளை தூக்குங்கள் என்கிறார். ஏற்பட்டது. அப்போதும் யாரும் கை தூக்க வில்லை.
இதையடுத்து அவர்,’ மிகக் குறைவான ஆதரவு மட்டுமே உள்ளன. இதன் பொருள் பலர் இப்போது அறிவு பெற்றுள்ளனர். விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் இஸ்லாமியப் போர் அல்ல. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மிகவும் அடக்குமுறையுடன் நடக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில் உள்ளது ஒரு கொடுங்கோல் அமைப்பு. இது இந்தியாவை விட மோசமானது. பாகிஸ்தானில் இருப்பதைப் போல இந்தியாவில் அதிக ஒடுக்குமுறை இல்லை.
2007ல் லால் மசூதி முற்றுகை போல் சோகம் இந்தியாவில் நடந்ததா? இந்தியா தனது சொந்த குடிமக்களை குண்டுவீசி கொல்கிறதா? பாகிஸ்தானில் இருப்பது போல் இந்தியாவிலும் மக்கள் காணாமல் போகிறார்களா? வஜிரிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா முழுவதும் என்ன நடந்தது? இவை அட்டூழியங்கள். பாக். அரசு அதன் சொந்த குடிமக்களை குண்டுவீசித் தாக்கியது.
இந்தியாவில் இதுபோன்ற அட்டூழியங்கள் நடந்துள்ளனவா? நம்முடையதைப் போல அவர்களின் போர் விமானங்கள் தங்கள் மக்களை குண்டுவீசித் தாக்கியுள்ளனவா? இந்தியாவில் இவ்வளவு பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்களா? இங்கே, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி போராட்டங்களை நடத்தி சோர்வடைந்துவிட்டனர். இங்கே, மதகுருமார்களைக் காணவில்லை, பத்திரிகையாளர்களைக் காணவில்லை, தெஹ்ரீக்-இ-இன்சாப் உறுப்பினர்களைக் காணவில்லை’ என்று பேசியுள்ளார்.
The post இந்தியாவுடன் போரிட ஆதரவு இல்லை: பாக். மதகுரு வீடியோ வைரல் appeared first on Dinakaran.