
லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதனை தொடந்து மே 10ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாய்ந்த நதி நீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா செயல்படுத்தவில்லையென்றால் அது போருக்கான அறிவிப்பு என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள ஜம்மு-காஷ்மீர், நதி நீர், வர்த்தகம் , பயங்கரவாதம் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்' என்றார்.