
சிட்னி,
இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே வான்வெளி தாக்குதல் தீவிரமடைந்து போர் பதற்றம் அதிகரித்ததால் இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு அறிவித்தது.
13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறுகிறது. மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. முந்தைய அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் ஆட்டம் கூடுதலாக நகர்கிறது.
இதனிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (ஜூன் 11) நெருங்குவதால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு திரும்புவது வீரர்களின் தனிப்பட்ட முடிவுதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் எந்த முடிவெடுத்தாலும் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவுக்குத் திரும்புவதா இல்லையா என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவுதான். அவர்கள் எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஆதரிப்போம். மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி மேற்கொள்வது குறித்து அணி நிர்வாகம் ஆராயும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய அரசு மற்றும் பி.சி.சி.ஐ.யுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளது.