
துபாய்,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்நிலையில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே வங்காளதேசத்தை தோற்கடித்திருந்த இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட எட்டிவிட்டது. பாகிஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும். இதன் மூலம் பாகிஸ்தானின் அரைஇறுதி கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், "டாஸ் ஜெயித்தும் எந்த அனுகூலமும் கிடைக்கவில்லை. 280 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இந்திய பவுலர்கள் மிடில் ஓவர்களில் வெகுவாக கட்டுப்படுத்தினர். நாங்களும் மோசமான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை இழந்ததால் 242 ரன்னுக்குள் அடங்கிப்போனோம். இந்த ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்து விட்டோம். பீல்டிங்கில் கண்டிப்பாக முன்னேற்றம் காண வேண்டும். கோலி- கில் ஜோடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டது" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "தொடக்கத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் சூப்பர். அவர்களை இவ்வளவு குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தியது பந்து வீச்சாளர்களின் கூட்டு முயற்சியாகும். நாட்டுக்காக விளையாடுவதை மிகவும் நேசிக்கூடியவர் கோலி. தனது சிறந்த முயற்சியை எப்போதும் வெளிப்படுத்துவார். அதைத் தான் இன்றும் செய்துள்ளார். அவர் இவ்வாறு ஆடியதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை" என்று அவர் கூறினார்.