
சென்னை,
சென்னை கிண்டி ஐடிசியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற சிஐஐ தென் இந்திய மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது; தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.
கோவை, திருச்சி, ஒசூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளன; கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் அளவிற்கு மின்சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 12.11 சதவீதம் பங்களிப்பு செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு 8 சதவீதத்துக்கும் மேல் பொருளாதார வளர்ச்சி அடைந்து, இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு - சிஐஐ இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவேன். சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3-வது திட்டம் தயாராகி வருகிறது. பசுமைப் பொருளாதார துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீர்வளங்களை திறம்பட நிர்வகித்தல், நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறோம். தொழில்துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.