இந்தியாவின் முதல் இளம் பெண் பைலட்!

2 months ago 11

திறமைக்கு வயது ஒரு தடையே கிடையாது 6 வயதிலும் உலக செஸ் சாம்பியன் ஆகலாம், 60 வயதிலும் தன்னம்பிக்கை இருந்தால் பல மைல் தூரம் மாரத்தான் ஓடலாம். அப்படித்தான் 18 வயதில் கர்நாடகாவைச் சேர்ந்த சமைரா ஹுல்லூர் இந்தியாவின் இளம் விமானியாக தனது வரலாறை எழுதியிருக்கிறார். கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண், விமானி ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கி வெற்றியை கொண்டாடி வருகிறார். மாநிலத்தின் இளைய விமானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தவிர, நாட்டின் இளம் விமானிகளில் இவரும் ஒருவர். கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் (சிபிஎல்) பெற்றுள்ள சமைரா ஹுல்லூர் இளம் வயதிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம் தனது பெற்றோருக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார். சமைராவிற்கு நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.சமைரா தனது ஆரம்ப, இடைநிலை மற்றும் இளங்கலை கல்வியை விஜயபுராவில் முடித்தார், அதற்கு முன் டெல்லியில் ஆறு மாத விமானி பயிற்சி பெற்றார். 25 வயதில் விமானியாக மாறிய கேப்டன் தபேஷ் குமார்தான் இந்த இளம் பெண்ணுக்கு உத்வேகம்.

இது அத்தனைக்கும் காரணமாக ஒரு சம்பவம் அவரது சிறு வயதில் நடந்திருக்கிறது. விஜயபுரா உற்சவம் நடந்த போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம் செய்தது. இதில், தனது குடும்பத்தினருடன் சமைரா பயணித்திருக்கிறார்.அப்போது பைலட் அருகில் அமர்ந்திருந்த சமைரா, தனக்குள் எழுந்த சந்தேகங்களை, பைலட்டிடம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தார். பைலட்டும், சமைராவின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டே இருந்தார். அந்த தருணம் தான் பைலட் ஆக வேண்டும் என்று சமைரா முடிவு செய்து விட்டார். அதன்படி, புதுடில்லியில் உள்ள, ‘வினோத் யாதவ் ஏவியேஷன் அகாடமி’ மற்றும் மஹாராஷ்டிராவின் பராமதியில் உள்ள ‘கார்வார் ஏவியேஷன் அகாடமி’யில் பயிற்சி பெற்றார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் சார்பில் நடத்தப்பட்ட ஆறு தேர்வுகளிலும், முதல் முறையில் தேர்ச்சி பெற்றார்.அத்துடன், பகல், இரவு நேரங்களில் பல இன்ஜின்கள் கொண்ட விமானங்கள் உட்பட பல விமானங்களை 200 மணி நேரம் ஓட்டியுள்ளார்.அவருக்கு பயிற்சி அளித்த கேப்டன் தமேஷ் யாதவ், வினோத் யாதவ் ஆகியோரும், சமைராவின் சாதனைக்காக பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து சமைரா தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார், ‘‘இந்தத் தருணம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாட்டின் இளைய விமானிகளில் ஒருவராகிவிட்டேன். கர்நாடகாவில் சிபிஎல் நடத்தும் இளைய பைலட் நான். சிறுவயதிலிருந்து பைலட் ஆக வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. +2 முடித்தவுடன், தேர்வு எழுத டெல்லிக்குச் சென்றேன். அங்கே வெவ்வேறு கட்டமாக நான் ஐந்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். இப்போது கமர்சியல் பைலட்டாக தேர்ச்சி பெற்றிருக்கிறேன். 25 வயதில் பைலட்டாக லைசன்ஸ் பெற்ற கேப்டன் தபேஷ் குமார் தான் என்னுடைய ரோல் மாடல். சமைரா ஹுல்லூர் தந்தை அமீன் ஹுல்லூர் ஒரு கட்டிட உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர். தன்னுடைய மகள் சிறுவயதில் இருந்து கண்ட கனவுக்கு தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். இதுகுறித்து சமைராவின் தந்தை அமீன் ஹுல்லூர் கூறுகையில், ‘‘என் மகள் +2 தேர்வு எழுதும் முன் DGCA (Directorate General of Civil Aviation) தேர்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றிருந்தாள். பிறகு +2 தேர்வுக்குப் பின் சமைரா ஐந்து தேர்வுகளிலும் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு, சமைரா 200 மணி நேரம் பறக்கும் பயிற்சி உட்பட ஆறு மாத பயிற்சியை முடித்தார்.

இதுகுறித்து கர்நாடகாவின் மகாதேவி பெண்கள் பல்கலைக்கழக ஜர்னலிஸ்ட் துறை தலைவர் ஓம்கர் காக்கடே கூறுகையில், ‘வடக்கு கர்நாடகாவில் இன்னமும் பின்தங்கிய பெண்கள் பலரும் அடிப்படை கல்வி கூட கிடைக்காமல் அல்லது கல்வி மீதான ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமைராவின் இந்த சாதனை மிகப் பெரிய தூண்டுகோலாகவும் மேலும் எடுத்துக்காட்டாகவும் இருந்து அவர்களை வழிநடத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்றார். சமைராவிற்கு அவருடைய தந்தை மிகப்பெரிய ஆதரவாக இருந்து அவர் கண்ட கனவை நினைவாக்கி இருக்கிறார். ஆனால் இது போன்ற எத்தனையோ பெண்கள் ஏராளமான கனவுகளுடன் இன்னமும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் போதிய வசதி இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். என்னதான் கனவுகள் இருந்தாலும் திறமை இருந்தாலும் அதற்கான வசதி இல்லாமல் அவர்களின் பெற்றோர்களும் கூட ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என காத்திருக்கிறார்கள். இதற்கு இந்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளும் முன்வந்து பல வழிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்தால் இன்னும் எத்தனையோ பெண்கள் இளம் வயதிலேயே பல சாதனைகளை படைப்பார்கள்.
– ஷாலினி நியூட்டன்

The post இந்தியாவின் முதல் இளம் பெண் பைலட்! appeared first on Dinakaran.

Read Entire Article