தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இதில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை முடிவு செய்வதில் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தை கோயில் நிர்வாகம் நேற்று மாலை அறிவித்தது.
இதுகுறித்து அறநிலையத் துறை இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குடமுழுக்கு விழா இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
அதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் முகூர்த்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்து, இது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.