புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என்று உறுதியாக தெரிவித்தார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பாகிஸ்தானில் புகுந்து 9 தீவிரவாத முகாம்களை இந்தியா தகர்த்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இருநாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் கடந்த 10 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் தரப்பு நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சூழலில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து முதல்முறையாக பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதன் விவரம் வருமாறு: நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் திறனையும், அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம். நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும், நமது உளவுத்துறையினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூரின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன். நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த அப்பாவி குடிமக்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர். இது தீவிரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும், ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே குரலில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின. நாங்கள் தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம். இன்று ஒவ்வொரு தீவிரவாதியும் நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்ததற்கான பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொண்டிருப்பார்கள்.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு பெயர் மட்டுமல்ல, இந்த நாட்டின் கோடானு கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு. ஆபரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி. மே 6ஆம் தேதி இரவு, மே 7ஆம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள். , பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீதும், அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீதும் இந்தியாவின் ராணுவம் சரியாக தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, இந்தியா இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டதன் அடிப்படையில் முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது. பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது இந்தியா ஏவுகணைகள், டிரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது. பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற தீவிரவாதிகளின் வாழ்விடங்கள், உலக தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது.
உலகில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால், செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும். லண்டன் சுரங் ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது இந்தியாவில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய தீவிரவாத தாக்குதலாக இருக்கட்டும், இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த தீவிரவாத முகாம்களோடு இணைந்திருந்தது. தீவிரவாதிகள் நமது சகோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால் இந்தியா தீவிரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது அழித்திருக்கிறது. இந்தியாவின் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடுமையான தீவிரவாதிகள் இறந்திருக்கிறார்கள்.
தீவிரவாதத்தின் பல கிளைகள் கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலவி வருகிறார்கள். இவர்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள். அவர்களை இந்தியா ஒரே அடியில் அழித்து விட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது. தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது. நிலைகுலைந்து போய் விட்டது. இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது. தீவிரவாதத்தின் மீது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, இந்தியா மீதே தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது. பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை இந்தியாவின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது. இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் டிரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம். இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது. இந்தியா முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. எனவே, இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேட தொடங்கியது. பாகிஸ்தான் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என உலக நாடுகளை வேண்டியது.
முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10ஆம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத்தளபதி நம்முடைய ராணுவத்தளபதியோடு தொடர்பு கொண்டார். அதற்குள் நாம் தீவிரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம். தீவிரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம். பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த தீவிரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம். இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது, அதாவது, அவர்களது தரப்பிலிருந்து தீவிரவாத தாக்குதலோ, அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது, உடனே, இந்தியா அதை பற்றி யோசனை செய்தது.
நான் மீண்டும் சொல்கிறேன். பாகிஸ்தானின் தீவிரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிதுகாலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற நாட்களில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம். அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம். இந்தியாவின் விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, இந்தியாவின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வழிமுறையாகி விட்டது.
ஆபரேஷன் சிந்தூர், தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது. ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது. முதலில், இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம். தீவிரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம். இரண்டாவதாக, இந்தியா அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொறுத்துக்கொள்ளாது. அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். மூன்றாவதாக, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் தீவிரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர். ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது. நாங்கள், எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம். யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். மேலும், இந்த முறை ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது.
நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிக பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த மாதிரியான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும். உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் தீவிரவாதத்திற்கானதும் அல்ல, தீவிரவாதத்தை கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் ராணுவமும் அரசாங்கமும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. ஒரு நாள், அது பாகிஸ்தானையே அழித்துவிடும்.
பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்தவேண்டும். இதைதவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை. இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது. பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒன்றாக நடக்க முடியாது, ரத்தமும், தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது. நாம் பாகிஸ்தானுடன் எப்போதாவது பேசினால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும்.
இன்று(நேற்று) புத்த பூர்ணிமா, பகவான் புத்தர் நமக்கு அமைதிக்கான பாதையைக் காட்டியுள்ளார். அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது. மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும்.
ஒவ்வொரு இந்தியரும் அமைதியோடு வாழ வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும். இதற்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்கவேண்டியது அவசியம். தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களில் இந்தியா இதைதான் செய்திருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை இந்திய ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இந்த இந்திய குடிமக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
* மோடி பேச்சின் 10 அம்சங்கள்
1. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள அர்த்தம்: நமது மகள்கள் மற்றும் சகோதரிகளின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அகற்றுவதன் விளைவுகளை எதிரிகள் இப்போது உணர்ந்துவிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் பெயரல்ல. அது மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு.
2. பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தல்: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்தின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முகம்; அது எனக்கு ஒரு தனிப்பட்ட வலியாக இருந்தது.
3. ராணுவ பதில் மற்றும் தாக்கம்: இந்தியா பாகிஸ்தானின் மையப்பகுதியைத் தாக்கியுள்ளது, நமது ஏவுகணைகள் அவர்களின் விமானத் தளங்களை சேதப்படுத்த துல்லியமாகத் தாக்கின… நமது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களை அழித்தபோது, அவர்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் ஆன்மாவும் தகர்க்கப்பட்டன. இந்தியத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4. பாகிஸ்தானின் கெஞ்சல்: தாக்குதல்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் எங்களிடம் கெஞ்சியது, ஆனால் அவர்கள் தங்கள் துரதிர்ஷ்டத்தை நிறுத்துவதாக உறுதியளித்த பின்னரே நாங்கள் அதைப் பரிசீலித்தோம். கடுமையாகத் தாக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் விரக்தியுடன் எங்களைத் தொடர்பு கொண்டது. பயங்கரவாத முகாம்கள் மீதான எங்கள் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இருளில் மூழ்கியது. ஆனால் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதற்குப் பதிலாக அவர்கள் எங்களைத் தாக்கத் துணிந்தனர்.
5. இந்திய ஆயுதப் படைகளுக்கு சுதந்திரம்: பயங்கரவாதிகளை தூசியாக அரைக்க ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கினோம்.
6. இந்தியாவின் சிவப்புக் கோடு: நாங்கள் பாகிஸ்தானுடன் பேசினால், அது பாக். மீது மட்டுமே இருக்கும்; ஆபரேஷன் சிந்தூர் இப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கை, ஒரு புதிய சிவப்பு கோடு வரையப்பட்டுள்ளது.
7. பயங்கரவாத கொள்கையில் புதிய இயல்பு: பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் இப்போது புதிய இயல்பு. பாகிஸ்தானுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம்; எதிர்காலம் அவர்களின் நடத்தையைப் பொறுத்தது அமையும்.
8. அணு ஆயுத அச்சுறுத்தல் : எந்தவொரு அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது.
9. இந்தியப் படைகளுக்கு பாராட்டு: நமது பாதுகாப்புப் படைகளை வாழ்த்தி வணங்க விரும்புகிறேன். ஆயுதப் படைகளின் இந்த துணிச்சலை இந்த நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நமது ராணுவ வலிமையால் பாகிஸ்தான் டிரோன்கள் எவ்வாறு குப்பைக் கிடங்கில் வீழ்த்தப்பட்டன என்பதை முழு உலகமும் கண்டது. நமது இராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பிற அனைத்துப் படைகளும் விழிப்புடன் உள்ளன.
10. நவீனப் போரில் இந்தியாவின் பலம்: தேசம் முதலில் என்பது நமது உறுதியான தீர்மானமாக இருக்கும்போது, உறுதியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. புதிய யுகப் போரில் நமது மேலாதிக்கத்தை நாம் நிரூபித்துள்ளோம்.
* அமெரிக்க தலையீடு பற்றி பேசாத மோடி
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் என்று முதலில் அறிவித்தது அமெரிக்க அதிபர் டிரம்ப்தான். மேலும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். தனது சொந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை 3வது நாட்டின் தலையீட்டை இதுவரை அனுமதித்தது கிடையாது. ஆனால், மோடி அரசு அமெரிக்காவின் தலையீட்டை அனுமதித்துள்ளது தவறானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது குறித்து பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா தலையீடு குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை.
The post இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாக். திணறியது அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் : பிரதமர் மோடி சூளுரை appeared first on Dinakaran.