இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதி மசூர் அசார் ஆப்கானில் இருக்கலாம் என்று பிலாவல் பூட்டோ விளக்கம் அளித்தார். இந்தியாவில் மிக முக்கிய தேடப்படும் பயங்கரவாதிகளான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் லஷ்கர்-இ-தைபா தலைவர் ஹபீஸ் சயீத் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் பாகிஸ்தான் மண்ணில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து அதை மறுத்து வந்தது.
இந்தச் சூழலில், சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலில், பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் உட்பட முக்கிய பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக மசூத் அசாரே ஒப்புக்கொண்டது, அவர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை மேலும் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் ஆளும் கூட்டணியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ சர்தாரி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘மசூத் அசார் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது. அவர் ஆப்கானிஸ்தானில் இருக்க வாய்ப்புள்ளது. அவர் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா தகவல் அளித்தால், நாங்கள் மகிழ்ச்சியுடன் அவரைக் கைது செய்வோம். மற்றொரு தேடப்படும் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக இல்லை. அவர் பாகிஸ்தான் அரசின் காவலில் உள்ளார்’ என்று கூறினார்.
The post இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதி மசூர் ஆப்கானில் இருக்கலாம்: பிலாவல் பூட்டோ விளக்கம் appeared first on Dinakaran.