மும்பை: இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன. பின்னர் போர் பதற்றம் காரணமாக வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் நலன் கருதி போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிசிசிஐ மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில், ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன. நிலைமை சரியான பின்னர் போட்டிகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், ஆர்சிபி 2ம் இடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் 3வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் 4வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.
The post இந்தியா – பாகிஸ்தான் போர் : தேச பாதுகாப்பு கருதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தம்!! appeared first on Dinakaran.