மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுக்கு பிறகு தாரைவார்த்தது. அதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் தோற்று 10 ஆண்டுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோனது.
இந்த தோல்விகளின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் போதும், பயிற்சியின் போதும் அணியினருடன்தான் பயணிக்க வேண்டும். குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ செல்லக்கூடாது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்து செல்வதால் விளையாட்டில் கவனம் சிதறுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இதிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது. 45 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு தொடர் என்றால் வீரர்களுடன் 2 வாரம் மட்டும் குடும்பத்தினர் தங்கியிருக்க அனுமதிக் கப்படுவார்கள்.
சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் தனிப்பட்ட படப்பிடிப்பிலோ அல்லது விளம்பர நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ளக்கூடாது.
தேசிய அணிக்கு தகுதியான மற்றும் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அத்தியாவசியமான ஒருசில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.
தனிப்பட்ட மேலாளர்கள், சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கிய தனிப்பட்ட பணியாளர்களை அழைத்து செல்ல தடை.
பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரம் கிளம்ப கூடாது. அணியினருடன்தான் செல்ல வேண்டும்.
விதிமுறைகளில் தளர்வுகள் வேண்டுமெனில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் அனுமதி பெற வேண்டும்.
இது போன்ற விதிமுறைகளை பின்பற்ற தவறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. தண்டனையின் ஒரு பகுதியாக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.