இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்

2 hours ago 1

சென்னை,

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து வருகிற 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு விண்வெளிக்கு பயணம் செய்ய இருக்கிறார். இதையொட்டி இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷூ சுக்லா கூறும்போது, 'ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறேன்.

விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணத்தின் வாசலில் நிற்கிறேன். பல்வேறு அமைப்புகள் முதல் கண்டங்கள் மற்றும் கலாசாரங்கள் முழுவதும் மேம்பட்ட தளங்கள் வரை, இந்தப் பயிற்சி தீவிரமானது மற்றும் ஆழ்ந்த பலனளிப்பதாக உள்ளது. விண்வெளியில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பின்னால் மாதங்கள், ஆண்டுகள் பெற்ற பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும். இந்த பயணத்தில், வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் நான் என்னுடன் எடுத்துச்செல்கிறேன்.

இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவு கடந்த 1984-ம் ஆண்டு ரஷியாவின் சோயுஸில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஒரு சிறப்பான பரிசை விண்வெளிக்கு எடுத்து செல்கிறேன். அங்கிருந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பிய உடன் அவரை நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் அந்த பரிசை ஒப்படைப்பேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர்கள் இந்திய உணவு வகைகளை சுவைப்பதற்காக கேரட் அல்வா, பாசிப்பருப்பு அல்வா மற்றும் மாம்பழ ஜூஸ் போன்ற இனிப்புகளை எடுத்துச்செல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article