இந்திய நீதிமன்றங்களில் நிறுவப்பட்டுள்ள நீதி தேவதை சிலையில் மாற்றம்: பார் அசோசியேஷன் எதிர்ப்பு

8 months ago 21

டெல்லி: இந்திய நீதிமன்றங்களில் நிறுவப்பட்டுள்ள நீதி தேவதை சிலையின் கண்களில் இருந்து கருப்பு துணி அகற்றப்பட்டதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கருப்பு துணியால் கண்கள் கட்டப்பட்டு வலது கையில் தராசு உடனும், இடது கையில் வாளுடனும் கம்பீரமாக நின்றிருந்த நீதி தேவதையின் சிலையில் கடந்த வாரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன்படி கருப்பு துணி அகற்றப்பட்டதோடு வாளும் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக கையில் அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை நீதி தேவதை ஏந்தி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டது. அத்துடன் இந்த புதிய சிலை தலையில் கிரீடம், நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கபில் சிபில் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் அலுவல் ரீதியான கொடி மற்றும் இலச்சினையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்திற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொடி, இலச்சினை மற்றும் நீதி தேவதை சிலையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கபில் சிபில் கூறியுள்ளார். எதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன என்று தங்களுக்கு புரியவில்லை என்றும் கபில் சிபில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கான நூலகத்தை அருங்காட்சியமாக மாற்றும் முன்மொழிவுக்கு பார் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The post இந்திய நீதிமன்றங்களில் நிறுவப்பட்டுள்ள நீதி தேவதை சிலையில் மாற்றம்: பார் அசோசியேஷன் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article