இந்திக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை மடைமாற்றும் முயற்சி: திருமுருகன் காந்தி குற்றசாட்டு

1 day ago 7

சென்னை: இந்திக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை மடைமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக திருமுருகன் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கமலின் திரைப்படம் கன்னடம்-தமிழ் குறித்தா பேசுகிறது?

கமலின் கருத்தும் அவரது படைப்பும் ஒன்றா?

இவ்விரண்டையும் தொடர்புபடுத்தி திரையிடலை தடுப்பது நியாயமென்றால், தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எதிராக பேசிய கர்நாடக காங்கிரஸ், பாஜக தலைவர்களின் கருத்தை முன்வைத்து இக்கட்சிகள் தமிழ்நாட்டில் எப்படி தேர்தலில் போட்டியிடலாம் என கேட்பதும் நியாயம் தானே?இந்தியா ஒரு தேசம் என்கிறீர்கள், அனைவரும் சமமான குடிமகனென்றால் அவர்களது வணிக உரிமைகள் தேசத்திற்குள்ளாக வேறுபடுமா? தமிழிலிருந்து கன்னடம் வரவில்லை என நீதிபதியோ, நீதிமன்றமோ, வழக்கறிஞர்களோ ஆவணம் சமர்பித்தார்களா? எதனடிப்படையில் கமலின் வாதம் கன்னடத்திற்கு எதிரானது அல்லது கன்னட மக்களுக்கு எதிரானது என நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது?

சமஸ்கிருதமே இந்திய மொழிகளின் தாய்மொழி என அமித்ஷா சொன்னபோது, ஒருவேளை, கன்னட அமைப்புகள் அமித்ஷா மன்னிப்பு கேட்கவேண்டும், பாஜக கர்நாடகத்திற்குள் செயல்படக்கூடாது என சொல்லி இருந்தால், இதே கருத்தை நீதிபதி வெளியிட்டிருப்பாரா? கன்னட அமைப்புகள் சமஸ்கிருதத்தை நோக்கி இக்கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஏனெனில் இச்செயலை செய்பவர்கள் பின்னனியில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் இருந்தே வந்துள்ளது. 2016ல் காவிரி சிக்கலின் பொழுது தமிழர்கள் மீதான தாக்குதலை பின்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ். இதை அம்பலப்படுத்தி மே17 மற்றும் தோழமை அமைப்புகள் சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்)

சமஸ்கிருதத்திலிருந்து கன்னடம் வந்தது என சொன்ன போதெல்லாம் அமைதிகாத்த கன்னட அமைப்புகள் கமலுக்கு மட்டும் எதிராக பொங்குவது மொழி மீதான அன்பினாலா அல்லது தமிழ்-தமிழர்கள் மீதான வெறுப்பினாலா? தமிழ், கன்னடம் மற்றும் இதர திராவிட மொழிகள் குறித்து ஆய்வரங்கங்கள், விவாதங்கள் நடப்பது குறித்து நீதிமன்றங்கள் பேசி இருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கலாம். மாறாக மன்னிப்பு கேட்க சொல்வதற்கு நீதிமன்றங்கள் எதற்கு? தமிழுக்கும் கன்னடத்திற்கும் தொடர்பில்லையென நிரூபிக்க வேண்டியது நீதிபதியின் பொறுப்பாக தற்போது மாறியுள்ளது என்பதாகவே நாம் புரிந்துகொள்ளலாம்.தமிழ்-கன்னட மக்களிடையே இடைவெளியை உருவாக்க வேண்டுமானால் இதுபோன்ற தீர்ப்புகள் பயன்படுத்தப்படலாம்.

இந்த சர்ச்சையின் பின்னனியில் இருப்பது ‘சமஸ்கிருதமே கன்னடத்தின் மூலமொழி’ எனும் அரசியல். கன்னட மொழியின் தமிழ் பின்னனியை-தமிழ் தொடர்பை நிராகரிக்கும் சமஸ்கிருத-ஆரிய அரசியலே இச்சிக்கலை தூண்டி விடுகிறது. கன்னடத்தின் சமய பிரிவு, கன்னட பண்பாடு, கன்னட மொழி ஆகியன சமஸ்கிருத-ஆரிய மரபை மூலமாக கொண்டிருப்பவை எனும் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளே இந்த விவாதத்தின் பின்னனியில் இயங்குபவை.

இது கமலஹாசன் தொடர்புடையாக மட்டுமே நாம் புரிந்துகொள்வதைவிட, இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதிராக தென்னிந்தியாவில் எழும் ‘திராவிட மொழி குடும்பத்தினரின்’ கிளர்ச்சியை மழுங்கடிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட அரசியல். இவ்வகையில் இந்திக்கு எதிராக கிளர்ந்த தமிழர்களின் அரசியலை கன்னடர்களும் பின்பற்றி விடக்கூடாதென ஆர்.எஸ்.எஸ்சால் முன்னகர்த்தப்படும் தமிழ்-வெறுப்பு அரசியல். கன்னடர்களின் ‘இந்தி எதிர்ப்பை’ திட்டமிட்டு ‘தமிழ் எதிர்ப்பாக’ மாற்றுகிறது ஆரிய ஆர்.எஸ்.எஸ் அரசியல். நீதிமன்ற தீர்ப்புகள் இதற்கு துணை போகிறதா என்பதே நம் கவலை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இந்திக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை மடைமாற்றும் முயற்சி: திருமுருகன் காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article