இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

3 months ago 6

சென்னை: இந்த ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-IIன் கட்டுமான பணிகள், 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டம்-IIல் மொத்தம் 42.6 கி.மீ நீளத்திலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.வழித்தடம் 3-ல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாதவரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் – தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தட பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது. பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமான பாறைகள், அதிநீரோட்ட பகுதிகள் மற்றும் நகர்புறத்திற்கென இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக சந்தித்து, சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் நேற்று வெளிவந்தது.

இந்த முக்கியமான பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது: கலைஞர் முதல்வராகவும் – நான் துணை முதல்வராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்கு பிறகு, இரண்டாம் கட்ட பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியை கொண்டே தொடர்ந்து வந்தோம்.

அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாக செயல்படுத்தி வருகிறோம்.2025-ம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.  நடைபெற்று வரும் பணிகளை நேற்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆய்வு பணியின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* கிரீன்வேஸ் – அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது
அடையாறு என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சுரங்கம் தோண்டும் பணிகளை கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து தொடங்கி, அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையத்திற்கு அருகில், அடையாறு ஆற்றின் கீழ் சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் வழித்தட பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது. 2024ம் ஆண்டு செப்டம்பரில் காவேரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், டவுன்லைன் சுரங்கம் தோண்டும் பணியினை முடித்துள்ளது.

The post இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article