
சென்னை,
சென்னை பெருநகர காவல், மத்தியகுற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புகார்தாரர் பாரதி ஆ/வ 27 மற்றும் 12 நபர்களுக்கு அரசு மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) மற்றும் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ராதாகிருஷ்ணன் மற்றும் மோகன்ராஜன் ஆகியோர் அறிமுகம் செய்து கொண்டு தலைமைச்செயலகத்தில் துணைச் செயலாளர் ஆக இருப்பதாகவும் பல நபர்களுக்கு அரசு துறையில் வேலை வாங்கி கொடுத்திருப்பதாக கூறியதை நம்பி பாதிக்கப்பட்ட 12 நபர்களிடம் மொத்தம் ரூ.1,66,36,௦௦௦ பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பணிநியமான ஆணைகளை கொடுத்து ஏமாற்றியதாக 17.05.2025 அன்று கொடுத்த புகாரின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புலன் விசாரணையில் எதிரிகள் 1.மோகன்ராஜன், வ/52, தி.நகர், சென்னை மற்றும் 2.ராதாகிருஷ்ணன்,வ/42, விருதுநகர் மாவட்டம் ஆகிய இருவரும் புகார்தாரர் உட்பட 12 நபர்களிடம் அரசு மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1,66,36,000 பணத்தை ரொக்கமாகவும், பணபரிவர்த்தனை வங்கி மூலமாகவும் பெற்றுக் கொண்டு போலியான பணிநியமன ஆணையை வழங்கியது விசாரணையில் உண்மையென தெரியவந்தது.
மேற்கண்ட வழக்கின் விசாரணையில் உடனடி நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றபிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா, கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் எதிரிகள் மோகன்ராஜன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் முறையே தி.நகர் மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 06.06.2025 -ம் தேதி கைது செய்தனர். எதிரிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது போன்று பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றும் நபர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.