
லக்னோ,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றிரவு லக்னோவில் நடநத 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் - பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 225 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 226 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பெங்களூரு 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் உ. பி. வாரியர்ஸ் திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி. லீக் சுற்றுடன் நடையை கட்டியது. இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளன. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இப்போட்டியின் முதல் பந்திலிருந்தே அவர்கள் அதிரடியாக பேட்டிங் செய்தனர். சீசனின் கடைசி கட்டத்தில் அவர்கள் வித்தியாசமான மனநிலையில் இப்போட்டியை விளையாடியுள்ளனர்.
கடைசி மூன்று ஓவர்களில் நாங்கள் நன்றாக விளையாடினோம். இப்போட்டியில் ஜார்ஜியா வோல் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். நாங்கள் தொடங்கிய விதத்தின் மூலம் இது ஒரு நல்ல சீசனாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் கடைசி 5 ஆட்டங்களில் எங்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
சில நல்ல கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடினோம், சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை, போட்டியில் நிறைய தருணங்களை இழந்தோம். நிச்சயமாக இந்த சீசனில் இருந்து திரும்பப் பெற நிறைய இருக்கிறது. கடந்த சீசனில் எங்கள் அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய மூன்று வீரர்களை இழந்தது மிகப்பெரிய தோல்வி. ஆனால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் நன்றாக இருந்தனர்.
இன்று (நேற்று) ரிச்சா கோஷ் மற்றும் ஸ்னே ரானா பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்னே ரானாவுக்கு கடந்த சில வருடங்கள் கடினமாக இருந்தது. ஆனால், ஒரு மாற்று வீரராக அவர் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் அவ்வப்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். இவ்வாறு அவர் கூறினார்.