மரக்காணம், டிச. 2: வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்றுமுன்தினம் இரவு புதுவை மாநிலத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் பல கிராமங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதியில் பெய்த கனமழையால் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அருகில் இருக்கும் உப்பளங்களிலும் புகுந்தது.
இதனால் உப்பளங்களில் இருந்து அதிகப்படியான தண்ணீர் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி வந்த வண்ணம் உள்ளது. இதனால் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட தீர்த்தவாரி பகுதியில் இசிஆர் சாலையின் ஒரு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஒரு வழித்தடத்தில் மட்டுமே போக்குவரத்து செல்கிறது. தொடர்ந்து வெள்ளம் அதிகரித்தால் அப்பகுதியில் சாலை முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்தும் பாதிக்கப்படும், என பொதுமக்கள் கூறினர்.
The post இசிஆரில் போக்குவரத்துக்கு தடை appeared first on Dinakaran.