
லீட்ஸ்,
இங்கிலாந்து, இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 2வது இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வருகிறது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றிபெற 102 ரன்கள் தேவை. இந்தியா வெற்றிபெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
37.3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தோல்வியை தவிர்க்க இந்தியா போராடி வருகிறது. தேநீர் இடைவேளையின்போது மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் சற்று கால தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இங்கிலாந்தின் வெற்றியை தடுத்து ஆட்டத்தை டிரா செய்ய இந்தியா முயன்று வருகிறது. மழை, வெளிச்சமின்மை போன்றவற்றால் ஆட்டத்தை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.