
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிச்சுமை காரணமாக அவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்த 2-வது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தோல்வியால் துவண்டு போயுள்ள இந்திய அணிக்கு இது பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.