இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவாரா..? கம்பீர் பதில்

14 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) தொடரின் அங்கமாக நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லின் முதல் சோதனை இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்துக்கு நேற்றிரவு புறப்பட்டது. இதற்கு முன்பு புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

முன்னதாக இந்த தொடருக்கான இந்திய அணியில் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமளிக்காதது குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர், "நான் ஒன்றும் தேர்வாளர் கிடையாது" என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவுதம் கம்பீரிடம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவாரா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கம்பீர், "நல்ல பார்மில் இருந்தால் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். நாங்கள் 18 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தேர்வுக் குழுவின் தலைவர் ஏற்கனவே அந்தக் கேள்விக்கு பதிலளித்துவிட்டார் (ஐயர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை?). இது எப்போதும் நல்ல பார்மில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றியது. அணிக்குள் வந்து யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதுதான் முக்கியம்" என்று கூறினார். 

Read Entire Article