இங்கிலாந்தில் சாதிக்க அவரின் ஆலோசனை நிச்சயம் உதவும் - சாய் சுதர்சன்

5 hours ago 2

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். மேலும் சாய் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர் என்பதால் அவரை அணியில் சேர்த்ததாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார். அவருக்கு நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளதாகவும் அது இங்கிலாந்து மண்ணில் சாதிக்க உதவும் என்று சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் ஐ.பி.எல் தொடரின் இறுதிபோட்டிக்கு பிறகு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இதற்கு முன்பாகவும் அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். நான் எப்போதெல்லாம் அவரிடம் பேசுகிறேனோ அப்போதெல்லாம் பேட்டிங் குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

குறிப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது விராட் கோலியின் மனநிலை, கடினமான நேரங்களை அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளேன். அவரிடம் இருந்து வரும் பதில்களின் மூலம் நான் நல்ல தெளிவையும் பெற்றுள்ளேன். பேட்டிங்கில் அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தனது திறமை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என அனைத்துமே அவரை பெரிய வீரராக மாற்றியுள்ளது.

அந்த வகையிலே அவரிடம் இருந்து கிடைக்கும் அறிவுரைகளை வைத்து என்னுடைய கெரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன். மேலும் பேட்டிங் ரீதியான தொழில்நுட்ப விவாதங்களும் எங்களுக்குள் நடைபெற்றுள்ளது. நிச்சயம் அது எனக்கு இங்கிலாந்து மண்ணில் சாதிக்க உதவும்" என்று கூறினார்.

Read Entire Article