
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், 3-ந்தேதி(இன்று) ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023-ம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2022 தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.