காலே: இலங்கை-ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் நேற்று இலங்கையின் காலே நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கியது. ஆஸி தரப்பில் ஆல் ரவுண்டர் கூப்பர் கான்னோலி (21) சர்வதேச களத்தில் அறிமுகமானார். தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய பதும் நிசாங்கா 11 ரன்னிலும், திமுத் கருணரத்னே 36 ரன்னிலும் நாதன் லயன் பந்துவீட்டி வெளியேற்றினார். தினேஷ் சண்டிமால் 74 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, குசால் மெண்டீசும் தனது 20வது அரைசதத்தை அடித்தார். அடுத்து வந்தவர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன் மட்டுமே இலங்கை எடுத்திருந்தது. ஆஸி வீரர்கள் நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
* ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (35) ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து உள்ளார். 2015ம் ஆண்டு அறிமுகமான ஸ்டோய்னிஸ், 71 ஒருநாள் போட்டிகளில் 1495 ரன்கள் எடுத்து உள்ளார். 48 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 2017ம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 146 ரன்கள் எடுத்ததே ஸ்டோய்னிசின் அதிகபட்ச ஸ்கோர். இந்தியாவில் நடந்த 2023 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் ஸ்டோய்னிஸ் முக்கிய பங்காற்றினார்.
2018-19ம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியா அணியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஓய்வு குறித்து ஸ்டோய்னிஸ் கூறுகையில், ‘ இது நம்பமுடியாத பயணம். இது எளிதான முடிவு அல்ல. எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்’ என்றார். மார்க்ஸ் ஸ்டோனிஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறி உள்ளார்.
The post ஆஸிக்கு எதிரான 2வது டெஸ்ட் இலங்கை நிதான ஆட்டம் appeared first on Dinakaran.