
சென்னை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயல் பிரதான சாலையில் பிரபல உடற்பயிற்சி கூடம் மற்றும் ஓட்டல் அமைந்த வளாகம் இருக்கிறது. இன்று அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் பலத்த காற்றில் அந்த வளாகத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்தின் பிரமாண்ட பெயர் பலகை பெயர்ந்து விழுந்தது.
காற்றில் தூக்கி வீசப்பட்ட பெயர் பலகை உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்து, கீழே நின்று கொண்டிருந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார், நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.