சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என ஆளுநர் வழக்கில் அளித்த தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இத்தகைய வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர். இதனால் ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் நடைமுறைக்கு வந்துவிட்டன. மேலும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அந்த வகையில், ஆளுநரின் தீர்ப்பிற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதில்,
*வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
*தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
*மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை நிலைநாட்ட தமிழ்நாடு தொடர்ந்து போராடும். தமிழ்நாடு வெல்லும்.
*தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
*வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்த சட்ட வல்லுநர்களுக்கு நன்றி.
*ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. என தெரிவித்தார்.
The post ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!! appeared first on Dinakaran.