ஆரணியில் கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

1 day ago 6

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் 100-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் வாகன சேவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, உற்சவர் சாமியை மலர்களால் அலங்கரித்து தேரில் வைக்கப்பட்டது.

தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து தேர் பெரிய கடை வீதி, மண்டி வீதி, மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, வடக்கு மாடவீதி வழியாக மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே வியாபாரிகள் நீர் மோர், குளிர்பானங்கள், கேசரி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். தேர் மீது பக்தர்கள் நேர்த்திக்கடனாக உப்பு, மிளகு, பொரி உருண்டை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Read Entire Article