திருவண்ணாமலை: ஆரணி டவுன் பகுதியில் சக மாணவனை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியானது நூறு ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சதீஷ்குமார் என்ற மாணவரும் மற்றும் வசீகரன் என்ற மாணவரும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக சேத்துப்பட்டில் இருந்து பள்ளிக்கு வரக்கூடிய அரசு பேருந்தில் ஏறிய சதீஷ்குமார் என்ற மாணவருக்கும், மற்றொரு மாணவர் வசீகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் பேருந்தில் இருந்து இரண்டு மாணவர்களும் பள்ளியின் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இருவரிடையே மோதல் அதிகரித்ததால் வசீகரன் என்ற மாணவன் சதீஷ்குமார் என்ற மாணவனை கழுத்தின் பின்பக்கம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் சதீஷ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வசீகரன் என்ற மாணவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சதீஷ்குமார் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஆரணி டவுன் பகுதியில் சக மாணவனை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.