குளச்சல், டிச.16: நாகர்கோவில் ஒழுகினசேரி கோதை பகுதியை சேர்ந்தவர் தங்கம் (40). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் சம்பவத்தன்று பயணியை ஏற்றிக்கொண்டு மணவாளக்குறிச்சிக்கு சென்றார். பின்னர் அங்கு பயணியை இறக்கிவிட்டு நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளிசந்தை அருகே பேயோடு பகுதியில் வந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் தங்கம் படுகாயம் அடைந்தார்.
ஆட்டோவும் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் தங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளிச்சந்தை போலீசார் சேதமடைந்த ஆட்டோவை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த நாகர்கோவிலை சேர்ந்த அலெக்ஸ் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆம்னி பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.