புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் என்ற பதிலடி தாக்குதலில், பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள், ஒரு சி-130 போக்குவரத்து விமானம், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தானின் விமானப்படை தளங்களையும் இந்திய ராணுவம் அழித்தது. இந்தியப் படைகள் பயன்படுத்திய பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் எஸ்-400 போன்ற நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்கள், இரண்டு எச்சரிக்கை கருவிகள், 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், பல ஆளில்லா விமானங்கள் (யுஏவி) மற்றும் ஒரு சி-130 போக்குவரத்து விமானம் அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வோலாரி மற்றும் நூர் கான் விமானத் தளங்களில் நடந்த தாக்குதல்களால் பாகிஸ்தானுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
இந்திய விமானப்படையின் ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் போர் விமானங்கள் கண்காணிக்கப்பட்டு, தாக்குதலின் போது அவை அழிக்கப்பட்டன. மேலும், சுதர்ஷன் ஏவுகணை மூலம் 300 கி.மீ தொலைவில் இருந்து ஒரு முக்கிய வான்வழி சொத்தோ அல்லது மின்னணு எதிர்ப்பு விமானமாகவோ அல்லது வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானமாகவோ இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் தனது முழு இழப்புகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.
நான்கு நாட்கள் நீடித்த மோதலுக்குப் பின், மே 10ல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரியது. பாகிஸ்தானின் பதிலடியாக ‘ஆபரேஷன் புனியன் மார்சூஸ்’ தொடங்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், இந்த தாக்குதலின் இலக்கு முக்கியமே தவிர, இழப்புகளை மட்டும் கணக்கிடுவது முக்கியமல்ல என்று கூறினார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை என்றும், இந்தியா தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் அழிப்பு: பாதுகாப்பு வட்டாரங்கள் புது தகவல் appeared first on Dinakaran.