
புதுடெல்லி,
காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலையும் இந்திய முப்படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. அதோடு பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்களையும் இந்தியா அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய எல்லையோர மாநிலங்களில் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரை ஒட்டி உள்ள எல்லையோர பகுதிகளில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் எல்லை பாதுகாப்பு படையில் ஏராளமான பெண் வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜம்மு காஷ்மீரின் அக்நூர் பகுதியில், சர்வதேச எல்லையில் உள்ள 2 முக்கியமான எல்லை சாவடிகளை 7 இளம் எல்லை பாதுகாப்பு படை பெண் போலீசார் 3 நாட்களாக இரவு, பகலாக எல்லையை பாதுகாத்தது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக எல்லை பாதுகாப்பு படையில் உதவி கமாண்டர் நேஹா பண்டாரி தலைமையிலான அந்த படை வீரர்கள் போர் கனத்தில் முன்களத்தில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் 3 நாட்களாக இரவு, பகல் பாராது பணியில் ஈடுபட்ட அக்னூர் பகுதியில் உள்ள 2 நிலைகளை பாதுகாத்து உள்ளனர்.மேலும் போர் உக்கரம் அடைந்தபோது எதிரிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டபோது அவர்களை விரட்டி அடித்ததோடு பாகிஸ்தானின் 3 நிலைகளை அழித்துள்ளனர்.
இதுகுறித்து உதவி கமாண்டர் நேஹா பண்டாரி கூறுகையில்,
இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக அமைந்தது. எங்கள் குழுவில் பஞ்சாப்பை சேர்ந்த மன்ஜித் கோர் மற்றும் மல்கித்கோர் ஆகியோர் கண்காணிப்பு மற்றும் பதுங்கு குழியை உள்ளடக்கிய சிறிய கட்டமைப்புகள் கொண்ட 2 முன்னோக்கிய நிலைகளை பாதுகாக்கும் பணியில் அனுபவம் வாய்ந்தவர்கள்.அதேநேரம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா ராத் மற்றும் ஷம்பா பாசக், ஜார்க்கண்டை சேர்ந்த சுமிசெஸ் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஜோதி ஆகியோருக்கு போர் போன்ற சூழ்நிலையில் தங்கள் ஆயுத பயிற்சி மற்றும்மனஉறுதியை சோதிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
எங்கள் குழுவில் 4 பேர் கடந்த 2023-ல் குழுவுடன் இணைந்தனர். மேலும் 2 பேர் 17 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றார். எல்லையில் போர் தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது அங்குள்ள ஆபத்துகளை அறிந்த மூத்த அதிகாரிகள் பெண் போலீசார் அங்கிருந்து திரும்பலாம் என கூறினர். ஆனாலும் நேஹா பண்டாரி தலைமையிலான குழுவினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கடமையாற்றி உள்ளனர். இதுகுறித்து நேஹா பண்டாரி கூறுகையில், ஆபரேஷன் சிந்தூர், எதிரிகளை எதிர்கொள்ள ஆண்களை போலவே நாங்களும் திறமையானவர்கள் என்பதைஎன்பதை நிரூபிச்சு அரிய வாய்ப்பை எங்களுக்கு வழங்கியது என்றார்.