
புதுடெல்லி,
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக அந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் அவசரம் அவசரமாக ஊர் திரும்பினார்கள். அவர்களை அழைத்து வர இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு போர் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஈரானில் இருந்து இந்தியர்களின் வெளியேற்றம் தொடர்ந்தது. நேற்று முன்தினம் மாலை 296 பேரும், நேற்று அதிகாலை 272 பேரும் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணிக்கு மேலும் 173 பேர் வந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 4,415 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி ஈரானில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 3,597 ஆக உயர்ந்து உள்ளது. இஸ்ரேலில் இருந்து சுமார் 818 பேர் வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.