நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை குரும்பபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (32). பால் வியாபாரி. சில மாதங்களாக வியாபாரத்தில் கிடைத்த பணத்தில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். தொடர்ந்து பணத்தை இழந்ததால் அதனை மீட்க கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். இதில் ரூ.2 லட்சத்திற்கு மேல் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நத்தம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று செந்துறை அருகே பாலக்குட்டு என்ற மலை உச்சியில் உள்ள மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது, அது மகேந்திரன் என்பது தெரியவந்தது.
The post ஆன்லைன் சூதாட்டம் பணம் இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.