மஹோபா: ஆன்லைன் கேமில் மலர்ந்த கள்ளக்காதலின் எதிரொலியாக ‘உன்னை 55 துண்டுகளாக வெட்டி கொல்வேன்’ என்று கணவரை மிரட்டிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம் பட்டிபுரா பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஷீலு ரைக்வார். இனிப்பு பலகார கடை நடத்தி வரும் இவருக்கும், பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஆராதனா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 2022ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். திருமணமான சில மாதங்களிலேயே ஆராதனா, ‘பப்ஜி’ மொபைல் கேமிற்கு முழுமையாக அடிமையாகியுள்ளார்.
கணவர் கடைக்குச் சென்றதும், நாள் முழுவதும் வீட்டில் மொபைலில் கேம் விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த சிவம் (25) என்ற இளைஞருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல தீவிர கள்ளக்காதலில் வயப்பட்ட ஆராதனா தனது கணவர் ஷீலுவிடம் இருந்து விலகத் தொடங்கினார். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டைகள் வந்தன. ஒரு கட்டத்தில், தன் மகனையே அடித்து, கணவர் மீது குடும்ப வன்முறைப் புகார் கொடுக்கவும் ஆராதானா முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சண்டையின் உச்சக்கட்டமாக, ‘எனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்தால், உன்னை 55 துண்டுகளாக வெட்டி கொன்று டிரம்மில் அடைத்துவிடுவேன்’ என்று ஆராதனா தனது கணவரையே கொடூரமாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் ஷீலு அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவியின் தொடர் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த ஷீலு, தனது மனைவியுடனான திருமண உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆராதனாவின் கள்ளக்காதலன் சிவம், சுமார் 900 கி.மீ பயணம் செய்து லூதியானாவிலிருந்து மஹோபாவிற்கு இருக்கும் ஷீலுவின் வீட்டிற்கு வந்தார். பின்னர் ஆராதனாவிடம் ஆசை ஆசையாய் பேசிக் கொண்டிருந்தார்.
கடுப்பான ஷீலு தனது உறவுக்காரர்கள் மூலம் சிவத்தை வெளியேற்ற முயற்சித்தார். ஆனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறவில்லை. வேறு வழியின்றி, ஷீலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், ஆராதனா தனது கணவர் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பிரிந்து, கள்ளக்காதலன் சிவத்துடனே செல்ல முடிவு செய்துவிட்டார். தனது உயிருக்கும், தன் மகனின் உயிருக்கும் ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஷீலு தனது மனைவியை அவரின் காதலனுடன் செல்ல அனுமதித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆன்லைன் கேமில் மலர்ந்த கள்ளக்காதல்; ‘55 துண்டுகளாக வெட்டி கொன்று டிரம்மில் அடைப்பேன்’ கணவரை மிரட்டிவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி appeared first on Dinakaran.