
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நல்லூர் தனிப்படை போலீசார் அங்கு வந்து சந்தேகப்படும்படியான வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (வயது49) என்பவர் செல்போன் புதிய ஆப்-ல் ஆன்லைனில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.
இதில் ஜி.பே. வாயிலாக நேரடியாக பணத்தை பெற்றுள்ளார். பணத்துக்கு ஏற்ப பாயிண்ட்ஸ் கொடுத்துள்ளார். ஒரு பாயிண்ட்டுக்கு 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை பெற்றுள்ளார். முதல் முறை பணம் கட்டும்போது அவர் வெற்றி பெறுவது போல மாற்றங்கள் செய்து மீண்டும் அவர் அதிக தொகை செலுத்தப்படும்போது தோல்வி அடைவது போல செட் செய்துள்ளார். இதன் மூலம் 1,500 பாயிண்ட்டுகள் வரை விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பல லட்சம் ரூபாய் சூதாட்டத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீசனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 4 செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.