'போட்டியின் திருப்புமுனை இதுதான்' - தோல்விக்கு பின்னர் ஸ்ரேயாஸ் பேட்டி

1 day ago 6

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 191 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் புகுந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர்.சி.பி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த தோல்வி வருத்தமாக இருக்கிறது. ஆனால், எங்கள் வீரர்கள் எப்படி வாய்ப்பை எடுத்து கொண்டார்கள் என்பது சிறப்பாக இருக்கிறது. மேலும், எங்கள் அணியில் ஆதரவு ஊழியர்கள் முதல் உரிமையாளர்கள் வரை அனைவரும் சிறப்பானவர்கள். போட்டியை காண வந்துபங்களித்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.

கடந்த போட்டியை வைத்து பார்க்கும் பொழுது இங்கு 200 ரன்கள் சரியானதுதான் என நினைத்தேன். அவர்கள் அற்புதமாக பந்த வீசினார்கள். குருனால் பாண்டியா குறிப்பாக சிறப்பாக இருந்தார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது அதை பயன்படுத்தினார். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை (இங்கிலிஸ் விக்கெட்டை வீழ்த்தியது).

எங்கள் இளம் வீரர்கள் ஒவ்வொருவர் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் அச்சமற்ற முறையில் விளையாடினார்கள். நாங்கள் அடுத்த ஆண்டு திரும்பி வந்து சிறப்பாக விளையாடி இந்த கோப்பையை வெல்வோம். எங்களால் மீண்டும் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article